Archives: மே 2024

பீட்ஸா மூலம் இரக்கம்

என் திருச்சபை தலைவர் ஹரோல்ட் மற்றும் அவரது மனைவி பாம் ஆகியோரின் இரவு உணவிற்கான அழைப்பு என் மனதிற்கு இதமாயிருந்தது. ஆனால் அந்த அழைப்பு என்னை பதட்டப்படுத்தியது. ஏனென்றால், வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணான கருத்துக்களைக் கற்பிக்கும் கல்லூரி வேதாகமப் படிப்புக் குழுவில் நான் சேர்ந்தேன். அவர்கள் அதைப் பற்றி ஒருவேளை என்னிடம் பேசுவார்களோ? என்று அஞ்சினேன். 

பீட்சா உட்கொண்டவாறே, அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டனர் மற்றும் என்னுடைய குடும்பத்தையம் விசாரித்து அறிந்தனர். நான் என்னுடைய வீட்டுப்பாடம் எழுதுவது குறித்தும், என் நாய் மற்றும் நான் நேசிக்கும் நபரைக் குறித்தும் அவர்கள் இயல்பாய் பேசினர். அதன் பிறகுதான் நான் கலந்துகொண்ட குழுவைப் பற்றி மெதுவாக எச்சரித்து, அதன் போதனைகளில் என்ன தவறு என்று விளக்கினார்கள்.

அவர்களின் எச்சரிக்கை வேதாகம படிப்பில் வழங்கப்பட்ட பொய்களிலிருந்து என்னை விலக்கி, வேதத்தின் உண்மைகளுக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது. யூதா தனது நிருபத்தில், தவறான போதகர்களைப் பற்றி வலுவான மொழியைப் பயன்படுத்துகிறார். “விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று” (யூதா 1:3) அவர்களை எச்சரிக்கிறார். கடைசிகாலத்திலே பரியாசக்காரர் இருப்பார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவர்கள் ஆவியில்லாத ஜென்மசுபாவக்காரர்கள் என்றும் குறிப்பிடுகிறார் (வச. 18-19). இருப்பினும் யூதா, விசுவாசிகளை “சிலருக்கு இரக்கம் பாராட்டுங்கள்” (வச. 22) என்று அவர்களோடு சத்தியத்தை சமரசம் செய்யாமல் அவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கும்படி சொல்லுகிறார். 

ஹரோல்டும் அவரது மனைவி பாமும் நான் என் நம்பிக்கையில் உறுதியாக இல்லை என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் என்னை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் தங்கள் நட்பை வழங்கினர். பின்னர் தங்கள் ஞானத்தை வழங்கினர். குழப்பத்தில் உள்ளவர்களுடன் பழகும்போது, ஞானத்தையும் இரக்கத்தையும் பயன்படுத்த, இதே அன்பையும் பொறுமையையும் தேவன் நமக்குத் தந்தருளுவாராக.

 

வார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது

கெட்டவார்த்தை உபபோகிப்பதை எவ்வாறு அகற்றுவது? ஓர் உயர்நிலைப் பள்ளி “கெட்ட வார்த்தை பேசுவதில்லை” என்று உறுதிமொழியை எடுத்தது. அந்த பள்ளியின் மாணவர்கள் “நாங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அதின் சுவர்களிலும் எந்தவிதமான கெட்ட வார்த்தைகளையோ தவறான கருத்துக்களை கிறுக்கவோ பேசவோ மாட்டோம்” என்று உறுதிமொழியேற்றனர். இது ஓர் உன்னத முயற்சி. ஆனால், இயேசுவின் கூற்றுப்படி, எந்த விதிமுறைகளும் உறுதிமொழிகளும் ஒருபோதும் தவறான பேச்சின் வாசனையை மறைக்க முடியாது.

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் துர்நாற்றத்தை நீக்குவது நம் இதயத்தை புதுப்பிப்பதில் இருந்து தொடங்குகிறது. பழங்களைக் கொண்டு மரத்தின் வகையை மக்கள் அடையாளம் காண்பது போல் (லூக்கா 6:43-44), நம்முடைய பேச்சு, நம் இருதயம் அவரோடும் அவருடைய வழிகளோடும் ஒத்துப்போகிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அடையாள சின்னமாய் இருக்கிறது என்று இயேசு கூறுகிறார். பழம் என்பது ஓர் நபரின் பேச்சைக் குறிக்கிறது. “இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” (வச. 45). நம் வாயிலிருந்து வெளிவருவதை நாம் உண்மையில் மாற்ற விரும்பினால், முதலில் நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார். 

மறுரூபமாக்கப்படாத இருதயத்திலிருந்து வெளிவரும் தவறான வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வெளிப்புற வாக்குறுதிகள் பயனற்றவை. முதலில் இயேசுவை (1 கொரிந்தியர் 12:3) விசுவாசித்து, பிறகு நம்மை நிரப்ப பரிசுத்த ஆவியானவரை அழைப்பதன் மூலம் மட்டுமே தவறான பேச்சை நாம் அகற்ற முடியும் (எபேசியர் 5:18). தொடர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும் (வச. 20) ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதற்கும் (4:15, 29; கொலோசெயர் 4:6) மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் அவர் நமக்குள் செயல்படுகிறார்.

 

ஓர் மூத்தவரின் ஆலோசனை

“நான் எதற்கு வருத்தப்படவேண்டும்?” நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பிரபல எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸ் 2013ஆம் ஆண்டு சைராகுஸ் பல்கலைக்கழகத்தில் தனது தொடக்க உரையில் பதிலளித்த கேள்வி இதுவாகும். ஓர் வயதான நபராய் (சாண்டர்ஸ்) தன்னுடைய வாழ்க்கையில் தான் வருந்தும் காரியங்களிலிருந்து இளைஞர்கள் ஏதாகிலும் கற்றுக்கொள்வார்கள் என்று எண்ணி, அவர் வாழ்க்கையின் ஒருசில அனுபவங்களை அவர்களுடன் (பட்டதாரிகளுடன்) பகிர்ந்துகொண்டார். அவர் வருத்தங்களில், ஏழையாக இருப்பது, கடின வேலைகள் செய்வது போன்ற சில விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சாண்டர்ஸ் உண்மையில் அவைகளுக்காக வருத்தப்படவில்லை என்றார். மாறாக, தான் கருணை காண்பிக்கவேண்டிய ஓர் நபரிடத்தில் கருணை காண்பிக்க தவறிவிட்டதாக வருத்தப்பட்டார். 

அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவில் உள்ள விசுவாசிகளுக்கு இந்தக் கேள்விக்குப் பதிலளித்து எழுதுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஓர் குறிப்பிட்ட அரசியல் பார்வையை வைத்திருப்பது, சில புத்தகங்கள் அல்லது திரைப்படங்களைத் தவிர்ப்பது, ஓர் குறிப்பிட்ட விதத்தில் தேவனை ஆராதிப்பது போன்ற நமது பதில்களுடன் விரைந்து செல்ல இது தூண்டுகிறது. ஆனால் பவுல், “கெட்ட வார்த்தை” (எபேசியர் 4:29) மற்றும் “கசப்பும், கோபமும், மூர்க்கமும்” (வச. 31) போன்ற காரியங்களிலிருந்த நம்மை விடுவிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். அவருடைய பேச்சை முடிக்கும் தருவாயில், எபேசியர்களுக்கும் நமக்கும், “கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (வச. 32) என்று ஆலோசனை கூறுகிறார்.

இயேசுவின் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று நாம் நம்பும் எல்லாவற்றிலும் ஒன்று, நிச்சயமாக, இரக்கமாக இருக்கவேண்டும்.

 

உடனடி பாராட்டு

எத்தியோப்பியாவிற்கு ஓர் குறுகிய கால மிஷன் பயணத்தின்போது, எங்கள் குழு ஓர் உள்ளூர் அமைச்சகத்தின் மற்றொரு குழுவுடன் சேர்ந்து, குப்பைக் கிடங்கில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தினைச் சந்திக்கச் சென்றது. அவர்கள் எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் சாட்சிகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் ஜெபங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டோம். அந்த மாலையில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று, உள்ளூர் குழு உறுப்பினர் ஒருவர் தனது கிதார் இசைக்கருவியினை வாசிக்க, நாங்கள் நிலவின் ஒளியில் நின்று தேவனை ஆராதித்தோம். என்ன ஓர் புனிதமான தருணம்! அவர்களின் இக்கட்டான தருணத்திலும், இயேசுவில் மட்டுமே கிடைக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவர்கள் முழுமையாய் அனுபவித்தனர். 

அப்போஸ்தலர் 16ல், மற்றொரு எதிர்பாராத துதிவேளையைப் பற்றி வாசிக்கிறோம். இது பிலிப்பு பட்டணத்தில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. பவுலும் சீலாவும் இயேசுவைச் சேவித்தபோது கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கசையடி பெற்று, சிறையில் அடைக்கப்பட்டனர். விரக்திக்கு ஆளாகாமல், தங்கள் சிறை அறையில் “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்.” “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று” (வச. 25-26). 

மயக்கத்திலிருந்து எழுந்த சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்துகொள்ள விரைந்தான். ஆனால் கைதிகள் தப்பியோடவில்லை என்பதை உணர்ந்தபோது, அவன் கர்த்தருக்கு பயந்து, குடும்பத்தோடு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் (வச. 27-34).

தேவன் நம் துதிகளில் பிரியப்படுகிறார். வாழ்க்கையின் உயர்வான மற்றும் தாழ்வான எல்லா தருணங்களிலும் நாம் தேவனை துதிக்கப் பிரயாசப்படுவோம். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.